தாடி பிரச்சனை

(முன்குறிப்பு: மூன்றரை வருடத்திற்கு முன்னால் எழுதப்பட்டவை. தற்போது social media வில் வெளியிடப்படுகிறது)

தாடியெல்லாம் ஒரு பிரச்சனையா? அது நம்ம தாடியாக இருந்தால் இல்லாள் முறைத்தால் Gillette தானாகவே தன்வேலையை செய்துவிடும். மற்றவர்கள் தாடி வளர்த்தால் நமக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா? இருக்கிறதே. மேலே பார்ப்போம். 

இப்போது தாடிகளின் சாம்ராஜ்யம் நடக்கிறது. எங்கும்  வியாபித்து  இருக்கிறார்கள். ஆட்சியை வைத்துக்கொண்டு காட்சி காட்டுகிறார்கள். இந்த  ராமாவும் ட்ராமாவும் எவ்வளவு நாட்களுக்கு ஓடும் என்று  தெரியவில்லை. ஊகம்தான் செய்யலாம். ஊக்கம் தரும் நிலையில் இல்லை. வியூகம் சரியாக புலப்படவில்லை. நடப்பது நடக்கட்டும் நாளை நமதே என்று நம்புவோம். இன்றைய நிலவரத்தை பார்ப்போம்.

திருவள்ளுவர் மழித்தலும் நீட்டலும் வேண்டா என்று சொன்னார். ஆனால் அவரே வளர்ந்த தாடியுடன் தான் படங்களிலும் பஸ்களிலும் காட்சி தருகிறார். அப்போது அவருக்கு வசதியும்  நேரமும் இல்லாமல் இருந்திருக்கலாம். மேலும் உலகம் பழித்ததையெல்லாம் ஒழித்துவிட்டு  தாடி வளர்த்திருப்பார் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இப்போது உலகத்தை  ஒழிப்பதற்கென்றே கங்கணம் கட்டிக்கொண்டு சாமிகளாகவும் ஆசாமிகளாகவும் வந்திருக்கிறார்கள். தாடி வளர்த்தாலே Samson மாதிரி powerful ஆகிவிடுகிறார்கள்.

நாம் இதற்கெல்லாம் என்ன செய்துவிடமுடியும். முடிந்தால் உலகம் போற போக்கை பாரு தங்கமே தில்லாலே என்று பாட்டு பாடலாம். நம்மால் இசை பாட முடியவில்லை என்றால் மனதிற்குள் அசை போடலாம். இசைதான் பாடுவீர்களோ அசை தான் போடுவீர்களோ அந்த நேரத்திற்குள்ளேயே இந்த நாட்டையே உருட்டி எடுத்து சுருட்டிவிடுவார்கள் போலிருக்கிறது. என்ன செய்வது.  எல்லாம் மக்களின் ஆசையினாலும் அவசரத்தினாலும் ஏற்பட்டது. அவதிப்பட்டுத்தான் ஆகவேண்டும்.

ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்று தேற்றிக்கொள்ளலாம். ராவணர்கள் ஆண்டால் கூட பரவாயில்லை. ராமர்கள் அல்லவா ஆண்டு கொண்டிருக்கிறார்கள். நம் குறுநில மன்னர்களின் அகத்தையும் புறத்தையும் பார்த்தால் தெரியும். பார்த்துவிடலாமே. நிறையபேர் இருக்கிறார்கள். 

அவர்களில் சில ராமர்கள் – ராம் ரஹீம், ஆசாராம், ராம்பால், ராம்தேவ். இதைத்தவிர ஸ்ரீஸ்ரீ , சத்குரு  ஜக்கி வாசுதேவ், ராதே மா இன்னும் பலர்.   இவர்கள் குறுநில மன்னர்கள் இல்லையே என்று கேட்கலாம். இவர்களால்  மன்னர்கள் வாழ்கிறார்களா  அவர்களால்  இவர்கள்  வாழ்கிறார்களா என்பது கண்டே பிடிக்க முடியாது. எல்லாம் சிதம்பர ரகசியம். இதோ ஒரு தகவல் – மோடி தன் பிறந்த நாளன்று 200 மத தலைவர்களுக்கு ‘போதிக்கிறார்’. நகமும் சதையும் போல இவர்கள் . தனித்து பிரித்து பார்க்க முடியாது. 

போகட்டுமே. எல்லாம் துறவிகள் தானே என்றால் அப்படி ஒன்றும் தெரியவில்லை. முற்றும் துறந்த துறவிகள் இல்லை. சிலவற்றை மட்டும் துறந்தவர்கள். அவையும் எங்கே எப்படி எதற்காக துறந்தவர்கள் என்பதில் தான் விஷயம் இருக்கிறது. யாரிடம் துறக்கிறார்கள் என்பதிலிருந்துதான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.

ஒரு உதாரணத்திற்கு ராம் ரஹீமை பார்ப்போம். 

Dera Sacha Sauda – இது ஒரு சமூக ஆன்மீக அமைப்பு. Sirsa ஹரியானாவில் 1948 இல் உருவாகியது. இதற்கு ராம் ரஹீம் தனது ‘முதிர்ந்த’ 23 -ஆவது வயதில் தலைவராக முடிசூட்டப்பட்டார். இந்த அமைப்பை விரிவாக்கினார். தற்போது பல கோடி சீடர்களும் இந்தியாவில் 50 கிளைகளும் இருப்பதாக கூறுகிறது. 

இவர் கடந்த 25 ஆகஸ்ட் அன்று சீடர்களை கற்பழித்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். அன்று 200 கார்கள் 250 km  தூரம் பின் தொடர கோர்ட்டில் ஆஜரானார். நீதிபதியிடம் தவறுகளை மன்னிக்குமாறு கேட்டார். உட்கார்ந்து அழுதார். கோர்ட்டில் இருந்து வெளியேற மறுத்தார். 

இவர் மீது வேறு 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. அவரின் ரகசியங்களை வெளிக்கொண்டு வந்த இருவரை கொலை செய்ததாக கிரிமினல் வழக்குகள். இவரைப்பற்றி கடைசி தலைப்பு செய்தி – “600 skeletons discovered from rapist Ram Rahim’s Dera in Sirsa.”  இவருக்கு Honeypreet என்று ஒரு adopted daughter. இவர் adopted ‘as daughter’ or ‘for daughter’ என்று  தெரியவில்லை.   ஏனென்றால் இவர்கள் உறவு விகாரமாகி, விவகாரமாகி இந்த ‘மகளின்’ கணவருடன் விவாகரத்து ஆகியிருக்கிறது. இந்த ‘மகள்’ baba உடன் சிறைக்குள் செல்ல வேண்டும் என்று அடம் பிடித்திருக்கிறார். ‘ஆசைகள் பாசங்கள்’  இருக்கத்தானே செய்யும். தற்போது தலைமறைவாக இருக்கிறார். 

ராம் ரஹீம் பற்றி இன்னொரு தகவலையும் கூற வேண்டும். “”Ram Rahim has 53 world records in various categories, out of which 17 are Guinness records, 27 are Asia Book records, 7 India Book records and 2 are Limca records. Basically, Babaji’s personality is an all-round one, which we considered.” இது ஒரு பிரிட்டிஷ் பல்கலைக்கழகம் அவருக்கு Dr பட்டம் வழஙகும் பொது கொடுத்த புகழாரம். அவருடைய மற்ற சில ‘சாதனைகளுக்கு’ Guinness இல் இடம் கொடுக்க முடியாது. அதனால் விடப்பட்டு விட்டன.

இவர்களால் இப்படிப்பட்ட அக்கிரமங்களை செய்ய முடிகிறது. மக்களை திரட்ட முடிகிறது. இவ்வளவு காலமாக தொடர முடிகிறது. இவர்கள் குறுநில மன்னர்கள் தான். தங்களின் மக்கள் செல்வாக்கை கப்பமாக கட்டி மன்னர்களிடம் சட்டத்திலிருந்து பாதுகாப்பை  பெறுகிறார்கள். மன்னர்களாலும் பெருமளவுக்கு செய்ய முடிகிறது. ஏதோ தவறிப்போய் இந்த ஒரு நேர்மையான திறமையான தைரியமான இளைஞரிடம் வழக்கு வந்தது. அவரும் ஒரு நியாயமான ஆழமான தீர்ப்பை வழங்கிவிட்டார். இல்லையென்றால் எல்லோரையும் போல இவரும் தப்பியிருப்பார். 

ஆண்டவா என்று கடவுளுக்கு அறைகூவல் விடக்கூட  பயமாக இருக்கிறது. இவர்களும் தங்களை ஆண்டவர்கள் என்று  சொல்கிறார்கள்.  மக்களை அரவணைக்கிறார்கள்.  ஆட்கொள்கிறார்கள். எதிர்த்தால் ஆட்களை கொல்கிறார்கள். 

இதெல்லாம் நடந்த பிறகு சாதுக்களுக்கு பயம் வந்துவிட்டது. அவர்களுடைய தாடிகளுக்கும் பிரச்சனை வந்துவிட்டால் என்ன செய்வது. இப்போது இவர்கள் சபையை கூட்டி 14  குறுநில மன்னர்களை போலி துறவிகள் என்று கூறி குழுவிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். (HT news report) 

என்ன செய்து என்ன பயன். என்று தணியும் இந்த துறவிகளின் ‘தாகமும் மோகமும்’. பல லட்சங்களில் சீடர்கள் இவர்கள் காலடியில் வருடக் கணக்காக கிடக்கிறார்கள். எவ்வளவு man hours வீணாக போகிறது. இவர்கள் தானாக தெளிவு பெறுவது சாத்தியமில்லை. பெரும் முயற்சி தேவைப்படும். ஆளுபவர்கள் துறவிகளுடன் கூட்டணி போட்டிருப்பதால் அவர்களும் எதுவும் செய்யப்போவது இல்லை. பொதுநல சிந்தனை உள்ள சமூக அணிகளும் நிலைமையை மாற்ற இயலாது. எங்கே செல்கிறோம். யாமறியேன் பராபரமே. 

தற்காலிகமாக ஏதாவது யோசனை சொல்லலாம் என்று பார்க்கிறேன். சில மட்டும் தோன்றுகின்றன. 

1. சீடர்களை சேர்ப்பதை தடுக்க முடியாது. அது அவர்கள் சுதந்திரம். இந்த பக்தர்களையும் துறவிகளையும் gender wise பிரித்து விடுங்களேன். பள்ளிகளில் coeducation வேண்டாம் என்று நினைக்கிறீர்கள். துறவிகளுக்கும் பக்தர்களுக்கும் எதற்கய்யா ‘coeducation’.   

2.  சிறுவர் சிறுமிகளை இந்த துறவிகள் பக்தர்களிடமிருந்து பிரித்து வைக்கவேண்டும். இவர்களை பள்ளிகள் துவக்க அனுமதிக்க கூடாது. தேவையில்லாதது. சிறுவர்கள் இந்த துறவிகளைப்பார்த்து இதுவே நல்ல தொழிலாக இருக்கும் போல இருக்கிறது என்று இறங்கிவிட்டால். அவ்வளவு துறவிகளை இந்த நாடு தாங்காதய்யா. 

3. கடைசியாக, இந்த தலைப்பு செய்தியை பாருங்கள். “Guru Ram Rahim and His Infamous Case of Making 400 Male Followers Impotent”.  இதுவும் நல்ல ஆயுதம் தான். இதையே துறவிகள் ஆவதற்கு கட்டாயம் ஆக்கிவிட்டால். 95% துறவிகள் ஓடிப்போய்விடுவார்கள். நாடும் நலம் பெறும். மக்களும் நலம் பெறுவார்கள். 

இவை தவிர அரசியல்வாதிகளுக்கும், கட்சிகளுக்கும் சில கட்டுப்பாடுகள் போடலாம். பயந்துவிடப்போகிறார்கள். தங்களுக்கு தாங்களே விலங்கு மாட்டிக்கொள்வார்களா என்ன. வித்தியாசமான அரசியல்வாதிகளும், விழித்துக்கொண்ட மக்களும் உருவானால்தான் உண்டு. அதுவரை அப்துல் கலாம் கூறியது போல கனவு காண வேண்டியதுதான். பொறுப்போம். காலம் கைகூடி வரும் வரை காத்திருப்போம். காலம் ஒரு நாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும் என்று நினைத்திருப்போம். 

மீண்டும் வருவேன் என்று நினைக்கிறேன்.

Leave a comment